Wednesday 18 April 2012


கேள்வி - பதில்
ஜாமக்காரனின் பதில்கள்


சகோ.அகஸ்டின் ஜெபகுமார்
கேள்வி:  2012 பிப்ரவரி மாத ஜாமக்காரனில் GEMS மிஷனரி ஸ்தாபன ஸ்தாபகர் சகோ.அகஸ்டின் ஜெபகுமார் அவர்களைப்பற்றிய கேள்வி-பதில் பகுதியில் சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்களை அழைத்து பீகாரில் திறப்புவிழா நடத்தியதைக்குறித்த கேள்விக்கு நீங்கள் பதில் அளித்த விதம் சரியல்ல? அவர் ஊழியத்தையும், அவரின் பல பிரசங்கங்களைக் குறித்தும் நான் நன்றாக அறிவேன். அவர் உபதேசத்தில் சமரசம் (Compromise) செய்பவர் அல்ல. உங்களுக்கு அவரை பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். எப்படியோ அவரைக்குறித்த உங்கள் தவறான அபிப்ராயத்தை நீங்கள் மாற்றிக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவில் நீங்கள் இருவரும் மட்டுமே சத்தியத்தை சத்தியமாக பேசுகிறவர்கள், உங்கள் இருவரின் ஊழியம் இந்திய கிறிஸ்தவர்களுக்கு மிகவும் தேவை. தயவுசெய்து அவரைப்பற்றி இனி எந்த விமர்சனமும் செய்யவேண்டாம்!
பதில்:  உங்களைப்போல் ஏராளமானவர்கள் இதைக்குறித்து எனக்கு எழுதிவிட்டனர். தொலைப்பேசியிலும், இ-மெயிலும் சகோ.அகஸ்டின் ஜெபகுமார் அவர்களைப்பற்றி ஆதாரித்து, அவரைப்பற்றிய விதவிதமான அனுபவங்களையும் அவர் பட்ட கடினமான அனுபவங்களைப்பற்றியும் பக்கம் பக்கமாக எழுதி தீர்த்துவிட்டனர் என்றே கூறலாம்.
சகோ.அகஸ்டின் ஜெபகுமாரைப்பற்றி நீங்கள் அறிந்த நல்ல விஷயங்களைப்பற்றி உங்கள் எல்லாரையும்விட ஓரளவு அதிகமாக நான் அறிவேன் என்று எண்ணுகிறேன். நேருக்குநேர் நெருங்கி பழகி அல்ல. அவருடன் பழகும் வாய்ப்பு இரண்டு அல்லது மூன்று முறை மட்டும் எனக்கு கிடைத்தது. அவருக்கு என்னை அவ்வளவாக பிடிக்காது. ஆனால் எனக்கு அவரின் ஊழியம், குறிப்பாக மிஷனரி ஊழியம். அந்த ஊழியத்துடன் இணைத்து கல்வி, மருத்துவம் ஆகியவற்றை மிகவும் ஞானத்துடன் சேர்த்து செய்யும் அவர் ஊழியம், அதுவும் தேவையுள்ள இடத்தில், வசதிகள் குறைந்த வட இந்திய பகுதியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியை பிரம்மாண்டமான முறையில் ஆரம்பித்திருப்பது, தொழிற்கல்வி, செவிலியர் கல்லூரி ஆகியவற்றில் படிக்கும் மாணவ, மாணவிகள் மூலம் இயேசு கிறிஸ்துவை அறிய செய்து அவர்களுக்கு பயிற்சிகொடுத்து வெளி உலகத்துக்கு அவர்கள் இயேசுவை சுமந்து செல்ல செய்த அவரின் சமூகசேவை ஏற்பாடுகள், ஏழை பிள்ளைகளுக்கு விடுதிகள், படிப்பு பராமரிப்பு இவைகள் அனைத்தும் சாதாரண காரியமா!?
  தமிழ்நாட்டில் ஏழைகளுக்காகவே காருண்யா கல்லூரி ஆரம்பிக்கிறேன் என்று ஒவ்வொரு மேடையிலும், வானொலியிலும் பச்சை பொய்யை கூறி கல்லூரி சேர்க்கைக்கு லட்சங்களாக வாங்கிக்குவித்து கல்லூரி நடத்திய அந்த ஊழியர்கள் செய்த ஏமாற்றுதனத்தை இவர் செய்யவில்லையே! மேலும் பணம் சேர்க்கும் குறுக்கு ஏமாற்று வழியாக ஒரு பிள்ளைக்கு ரூபாய்.2000வாங்க சொல்லி கர்த்தர் கூறுகிறார். அதற்கு பெயர் இளம்பங்காளர் திட்டம் என்றும் அறிவித்து கிறிஸ்தவர்களை மட்டுமல்ல, புறமதஸ்தர்களையும் ஏமாற்றிய அந்த அழைக்கிறார் குடும்பம்போல இவர் பணம் திரட்டவில்லையே!
  கடந்த சில மாதத்துக்குமுன் 2012 பிப்ரவரி மாதம் நான் இயேசு அழைக்கிறார்அலுவலகத்துக்கு நானே நேரில் சென்றேன். அங்கு CD, புத்தகம் ஆகியவைகளை விற்கும் கட்டிடத்துக்கும் சென்றேன். நான் வாங்கிய பொருள்களுக்கு பில் (Bill) போட பணம் செலுத்தும் கவுன்டருக்கு சென்றபோது நீங்கள் இளம்பங்காளர் அங்கத்தினரா? என்று என்னை அடையாளம் தெரியாமலே கேட்டார்கள். இல்லை என்றேன். உடனே இப்போதே பங்காளர் திட்டத்தில் சேர்ந்தால் உங்களுக்கு டிஸ்கவுன்ட் உண்டு என்றார்கள். உடனே நான் எனக்கு டிஸ்கவுன்ட் வேண்டாம் என்றேன். டிஸ்கவுன்ட் வேண்டாம் என்றாலும், உங்களுக்காக விசேஷ ஜெபம் ஏறெடுக்கப்படும் என்றார்கள். நான் சொன்னேன் என் ஜெபம் என்னை வழிநடத்துகிறது, பாதுகாக்கிறது, ஆறுதல்படுத்துகிறது, பெலப்படுத்துகிறது. அதுவே எனக்கு போதும் என்றேன். I am not interested, Please don't force me - பில்லை போட்டு கொடுங்கள் என்றேன். உடனே பில் போட்டு கொடுத்தார்கள்.
  எனக்கு அடுத்த வரிசையில் ஒரு வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் அவர் தான் வாங்கிய Amplify Bible கொடுத்து Bill போட சொன்னார். உடனே அவரையும் பார்த்து பில்போடும் அந்த பெண் கூறினார். சார், நீங்களும் Young Partner Planல் - இளம்பங்காளர் திட்டத்தில் சேர்ந்தால் discount கிடைக்கும் என்றார். அவர் இரத்தின சுருக்கமாக என்னை சுட்டிக்காட்டி அவர் சொன்ன பதில் என் பதிலாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று சிரித்துக்கொண்டே ஆங்கிலத்தில் பேசினார். உடனே அந்த பெண் DGSபிரதரின் வேறு ஆங்கில DVD பாடல்கள் நிறைய உண்டு. அது வேண்டுமா? என்றார். நான் எல்லாவற்றையும் பார்த்து முடித்துவிட்டு எனக்கு தேவையுள்ளதைமட்டும் எடுத்துக்கொண்டேன், Bill Please என்றார். இப்படி இளம்பங்காளராக ஆள்சேர்க்க இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகளைப்போல, சென்னை பாஷையில் மீன்கடை பேரம்போல ஆள் சேர்க்கும் பணி அங்கு அழைக்கிறார் ஊழியத்தில் ஜரூராக நடக்கிறது. இளம்பங்காளர் திட்டத்தை கர்த்தரின் திட்டம் என்பது உண்மை என்று நம்பி ஏமார்ந்துப்போனவர்கள் எத்தனைப்பேர். அது கர்த்தரின் திட்டம் இல்லை என்று அறிந்தும் அந்த திட்டத்தில் சேரும் ஏமாளிகள் அதுவும், படித்த ஏமாளிகள் எத்தனைப்பேர்! இப்படியெல்லாம் பொய் சொல்லி அவர்களைப்போல ஊழியத்துக்கு பணம் சேர்க்கும் நபர் சகோ.அகஸ்டின் ஜெபகுமார் அல்ல என்பது எனக்கு நன்றாக தெரியும்.
  வெளிநாட்டில் சகோ.அகஸ்டின்ஜெபகுமார் பிரசங்கிக்கும் ஒவ்வொரு இடத்திலும் அவர் பிரசங்கிக்கும்போது அவரை காண்பவர்கள் அவர் கையில் கொடுக்கும் டாலர்களை, யூரோக்களைஅப்படியே தன் ஜிப்பாவில் இரண்டு பக்கமும் வாங்கி போட்டு அந்த இரவு தான் தங்கும் இடத்தில் உள்ளவர்களின் முன் மேசையில் அதை அப்படியே எடுத்துப்போட்டு அந்த டாலர்களை எண்ணும் படி சொல்லி அந்த பணத்தை அப்படியே GEMS பெயரில் DD எடுத்து இந்தியாவுக்கு அனுப்பிவிடுங்கள் என்று கூறியதையும் அறிவேன். காணிக்கை கையாளுவதில் உள்ள உண்மை மக்கள் தன்னிடம் கொடுத்த டாலர்கள் எவ்வளவு என்றுகூட கவனிக்க பிரியமில்லாத, பணத்தின்மீது நாட்டமில்லாத அவரின் செயல் ஒவ்வொரு நாட்டிலும் அவர் தங்கும் குடும்பத்தினர் என்னிடம் கூறும் சாட்சிகளாகும். அவருக்கு இயற்கையாக உள்ள கொஞ்சம் முன்கோபம், பேச்சில் முரட்டுதனம். அவரின் இந்த குணம் யாவும் பாவங்கள் அல்ல! அவரின் ஊழியம் எப்படி என்றும், அவரின் ஊழியத்தில் ஆரம்பத்தில் அவர் யாரோடு இருந்தார்! அவர்களிடமிருந்து எப்படி விலகினார்? என்ன காரியத்துக்காக விலகினார்! யாரால் இரட்சிக்கப்பட்டார், யாருடைய ஊழியத்தால் கவரப்பட்டார் என்பதெல்லாம் நான் அறிவேன். மேலும் தன்னை வழிநடத்தியவரை இன்னும் நன்றியுடன் நேசிக்கிறார் - ஆனால் அவர்கள் வழிகளை பின்பற்றாமல் ஜாக்கிரதையாக, தனக்கென்று ஒரு வழி வகுத்துக்கொண்டார். அற்புதமான, புதுமையான மனிதர் சகோ.அகஸ்டின் ஜெபகுமார். என்னையும், அவரையும் (அகஸ்டின் ஜெபகுமாரையும்) ஒன்றாக இணைத்து ஒரேமாதிரி சத்தியத்தை சத்தியமாக பேசுபவர்கள் என்று பேசி எழுதியவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் என் வழி வேறு! நான் சத்தியத்தை கூறும் முறையும் வேறு! அப்படியே தவறுகளை சுட்டிக்காட்டும்முறையும் வேறு! அவருடைய வழியும் வேறு.
  சமீபத்தில் கோயமுத்தூரில் VOC மைதானத்தில் அகஸ்டின் ஜெபகுமார் செய்த பிரசங்கம் அவருக்கே உரிய பிரசங்க துணிச்சலின் உச்சநிலையாகும். கோயமுத்தூரையும், கோயமுத்தூரில் உள்ள போலியான, மாய்மாலமான பெந்தேகோஸ்தே ஊழியர்களையும் சாடிய விதம் இருக்கிறதே! பந்தாடிவிட்டார் போங்கள்! அவரின் கோயமுத்தூர் பிரசங்க CDயை வாங்கிப்பாருங்கள்!
  கோயமுத்தூர் பெந்தேகோஸ்தே போதக ஐக்கிய சங்கத்தில் உள்ள பாஸ்டர்கள் இணைந்து அவசர கூட்டம் கூட்டி சகோ.அகஸ்டின் ஜெபகுமாருக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றி சகோ.அகஸ்டின் ஜெபகுமாருக்கு எதிராக அரசாங்கத்துக்கு இவர் ஊழியத்தை தடைசெய்ய வேண்டியும் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். இதற்கு பாஸ்டர்.டேவிட் பிரகாசும், அருமை நாயகம் மட்டும் அவர் தடை செய்யப்படும் திட்டத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இது சகோ.சாம்ஜெபதுரை எனக்கு எதிராகநீதிமன்ற வழக்குக்கான வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதைப்போல இருக்கிறது. மேலும் அகஸ்டின் ஜெபகுமார் அவர்கள் கோயமுத்தூருக்கு வரக்கூடாது என்று கோயமுத்தூர் பெந்தேகோஸ்தே பாஸ்டர்கள் அறிக்கையும் விடுத்துள்ளார்கள்.
சகோ.அகஸ்டின் ஜெபகுமார் RSS, பஞ்சரங்தள் போன்ற இந்துமத தீவிரவாதிகள் மூலமாக பலமுறை தாக்கப்பட்டவர், பலமுறை இவர் ஊழியங்களை RSSக்காரர்கள் தடைசெய்தார்கள். அவர்களுக்கெல்லாம் பயப்படாதவரா இந்த பூனைகளுக்கு பயப்படுவார்?
  டோனால்டு ஆபிரகாம் என்பவர் நடத்தும் அமாவாசை இரவு ஜெபகூட்டத்தைப்பற்றி அகஸ்டின் ஜெபகுமார் அவர்கள் சகட்டுமேனிக்கு வெகுவாக தாக்கி பேசினார். சென்னையில் பலர் இப்போது நடத்தும் அமாவாசை ஜெபகூட்டம், பௌர்ணமி ஜெபகூட்டம் இவைகளைக்குறித்து அந்த ஜெபகூட்டத்தை நடத்துபவர்களை பிசாசு ஓட்டும் மந்திரவாதிகள் என்று அவர்களை வர்ணித்து ஜாமக்காரனில் எழுதினேன். எவ்வளவு எழுதினாலும் கிறிஸ்தவ மக்களுக்கு புத்திவரவில்லை. சகோ.அகஸ்டின் ஜெபகுமார் அவர்கள் இப்படிப்பட்டவர்களைக்குறித்து கண்டனம் செய்து பேசியபோது அமாவாசை ஜெபகூட்டம் நடத்தும் பாஸ்டர்களால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. உச்சக்கட்டமாக கோயமுத்தூரில் ஒரு பாஸ்டர் வேதத்தில் யாக்கோபு கல்லை தலையில் வைத்து படுத்ததினால் பரலோக தரிசனம் கண்டார். அதுபோல தன் சபையில் செங்கல்களை அடுக்கி அதை பிரதிஷ்டை செய்து ஒரு கல் 10,000 ரூபாய்க்கு அந்த பாஸ்டர் விற்றுள்ளார். அவர் விற்கும் அந்த செங்கல்லை தலையில் வைத்து படுத்தால் பரலோக தரிசனம் காணலாமாம். இப்படி தன் சபையில் அறிவித்தவுடன் ஒரு லோடு செங்கல் விற்று தீர்ந்ததாம். ஏறக்குறைய 1 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது என்கிறார்கள். இத்தனை மோசமான முறையில் ஜெப வியாபாரம் நடப்பதை அகஸ்டின் ஜெபகுமார் காட்டமாக கண்டித்தார். இதில் என்ன தவறு? இந்த வெட்கம் கெட்ட ஜெப வியாபாரத்துக்கு ஒரு கண்டன தீர்மானமா? பெந்தேகோஸ்தே சபைமக்கள் இவைகளை சிந்திக்கவேண்டும்! பெந்தேகோஸ்தே போதக ஐக்கியசங்கத்தின் செயலர் மகிமையின் ஆலய (Church of Glory) பாஸ்டர்.இஸ்ரவேல் பொன்னப்பா என்பவர்தான் அந்த செங்கல் வியாபாரி ஊழியர் என்று கூறப்பட்டது.
  ஆனால் இந்த விஷயத்தில் சகோ.அகஸ்டின் ஜெபகுமாருக்கும், எனக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் அகஸ்டின் ஜெபகுமார் பெயரை கூறமாட்டார். ஆனால் நான் முழு விலாசத்துடன் பெயரையும் கூறுவேன். அகஸ்டின் ஜெபகுமார் கூறினார். இப்படி செங்கலை விற்று காணிக்கை பிரிப்பதற்கு பதில் வீதிவீதியாக பிச்சை எடுக்கலாமே! என்றார். அவ்வளவுதான். கோயமுத்தூர் பாஸ்டர்களை சகோ.அகஸ்டின் ஜெபகுமார் பிச்சைக்காரர்கள் என்று கூறிவிட்டார் என்று கூறி அதன்பின்தான் பெந்தேகோஸ்தே சபை ஐக்கியத்தில் கண்டனம் தீர்மானம் போட்டார்கள். இதே போன்று இவர் நாகர்கோவிலில் பேசிய செய்தி பெரும்பிரச்சனைகளை உண்டாக்கியது. அதன் காரணமாக அந்த நாள் பகலில் அவரை தாக்க முயற்சி செய்தவர்களில் ஒருவர் இப்போது இறந்தும் போனார். ஆக, இப்படிப்பட்ட ஊழியம் செய்பவரையும், அவர் ஊழியத்தையும் குற்றம் சொல்வேனா? என் பதிலை முழுவதையும் வாசித்துப் பாருங்கள்.
சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்கள் பொய் பேசுபவர் என்றேன். அகஸ்டின் ஜெபகுமாரும் அதை நம்புகிறார். அதனால்தான் அவர் ஊழியத்தையும் அந்த ஊழியத்தில் உள்ள குறைகளையும் பெயர் கூறாமல் அவர் ஜெபத்தில் பெயர் அழைப்பதைக் கண்டனம் செய்து அகஸ்டின் ஜெபகுமார் பிரசங்கித்தார். திறப்பின் வாசலைப்பற்றி விமர்சித்து மேடைகளில் பேசியதுமல்லாது, தன் பத்திரிக்கையிலும் அவர் எழுதினாரே!
  நாலுமாவடி திறப்பின் வாசலில் வருவோர் எண்ணிக்கை அதிகம். அதனால் பல கோடிரூபாய்கள் செலவு செய்து அத்தனை பிரம்மாண்டமான குளிர்சாதனம் பொருத்தும் திட்டத்தோடு கட்டும் அந்த பிரம்மாண்டமான கட்டிடம் அவசியம்தானா? மாதத்தில் ஒருநாள் நடக்கும் கூத்துக்காக இத்தனை கோடி ரூபாய்கள் இதற்கு முடக்கவேண்டுமா? ஒரு பிரம்மாண்டமான தீ-பற்றாத ஆஸ்பெட்டாஸ் கூரை வேய்ந்த ஜெப மண்டபம் கட்டினால் என்ன? என்றார். மேலும் அங்கு வரும் கூட்டம் எல்லாம் சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்கள் தங்கள் பெயரை கூப்பிடமாட்டாரா என்ற எதிர்பார்ப்பில்தான் ஒவ்வொரு மாதமும் வருகிறார்கள். ஒருவேளை மோகன் சி.லாசரஸ் அவர்களின்மறைவுக்கு பிறகு அத்தனை கோடிகள் செலவுசெய்து கட்டும் தமிழ்நாட்டிலேயே மிக பிரம்மாண்டமான அந்த கட்டிடத்தில் ஜெபிக்க அவருக்குபின் எத்தனைபேர் வருவார்கள்? என்று நான் ஜாமக்காரனில் எழுதினேன். சகோ.மோகன் சி.லாசரஸ்க்குபின் நாலுமாவடி திறப்பின் வாசல் கட்டிடம்கல்யாண மண்டபமாகவே மாறும்! அல்லது அரசியல் கட்சிகளின் மாநாடு நடத்த மட்டுமே வாடகைக்கு விடப்படும் என்று என் சார்பில் நான் எழுதி, சகோ.அகஸ்டின் ஜெபகுமார் கருத்தை அப்படியே பிரதிபலித்து எழுதினேன்.
  எயிட்ஸ் வியாதி சுகமானது என்ற பொய்யை மோகன் சி.லாசரஸ் பகிரங்கமாக கூறியவர், சமீபத்தில் நாகர்கோவில் ஹோம் சர்ச் நடத்திய கூட்டத்தில் கூட்டம் தொடங்கி பல மணி நேரம் கழித்துத்தான் பிரசங்கிக்க அவர் கையில் மைக் கொடுக்கப்பட்டது. அந்த மீதியான கொஞ்சநேரத்தில் சரவணன், குப்புசாமி, ஜாய்ஸ் இப்படி சரளமாக பல பெயர்களை கர்த்தர் காண்பிக்கிறார் என்றுபொய்க்குமேல் பொய் கூறி கூட்டத்தை முடித்தார். இதை பொய் என்று கூறாமல் வேறு எந்த வார்த்தையை உபயோகிப்பது. பொய் என்றால் பொய்தான். இதுதான் என் உள்ளத்தில் வெறுப்பை உண்டாக்குகிறது. இப்படி இவர் ஜெபத்தில் கூறுவது, கர்த்தர் காட்டுவது அல்ல என்று மேடைக்கு மேடை பிரசங்கித்த சகோ.அகஸ்டின் ஜெபகுமார் அவர்கள் அவர் பேசுவது பொய் என்று அறிந்தும் அவரை திறப்பு விழாவுக்கு அழைத்து கவுரவித்தாலும், தொடர்ந்து கடந்த வருடம் லக்னோ என்ற இடத்தில் இருவரும் ஒரே மேடையில் பிரசிங்கத்ததையும் பத்திரிக்கையில் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? இவரைப்பற்றி இவர் கண்டித்தது எல்லாம் ஷோவா? என்று கேட்கமாட்டார்களா? அல்லது சகோ. மோகன் சி.லாசரஸ் அவர்களின் கருத்துகளை, அவர் ஊழியத்தை இப்போது நான் நம்புகிறேன் நான் முன்பு அவரைப்பற்றி கூறிய கருத்து தவறு என்று அகஸ்டின் ஜெபகுமார் வருத்தம் தெரிவிக்கிறார் என்றுதானே மக்கள், குறிப்பாக கிறிஸ்தவ விசுவாசிகள் சந்தேகிப்பார்கள்!
  கோயமுத்தூரில் செங்கல் விற்ற பாஸ்டரைப்பற்றி இப்படியெல்லாம் காராசாரமாக கண்டித்துவிட்டு, அவரையே பீகாருக்கு அழைத்து திறப்புவிழா நடத்தினால் உங்களுக்கு என்ன நினைக்கதோன்றும், கேள்வி கேட்ட நீங்களே யோசித்துப்பாருங்கள். அதை நினைத்து அகஸ்டின் ஜெபகுமார் குழுவில் உள்ள பலர் எனக்கு எழுதியதின் பிரதிபலிப்புதான் என் பதிலாக 2012 பிப்ரவரி மாதம் ஜாமக்காரன் கேள்வி-பதில் பகுதியில் எழுதினேன். இப்போதும் அப்படி நான் எழுதியது தவறு என்று கூறமாட்டேன்.
  சகோ.அகஸ்டின் ஜெபகுமார் ஊழியங்களுக்காக ஜெபிக்கிறவன் நான். நான் போகும் இடங்களில் அவர் ஊழியத்துக்கு தாராளமாக கொடுங்கள் என்று பேசுபவன் நான். அப்படியே திறப்பின் வாசல் கட்ட ஒரு சதுரஅடிக்கு 10,000 கொடுக்காதீர்கள். அதில் ஆசீர்வாதம் இல்லை என்றும் நான் கூறினேன். ஏஞ்சல் TV, சகோ.வின்சென்ட் செல்வகுமார், சகோ.ராபின்சன் இவர்களின் ஜெபமண்டபம், பல நாடுகளில் கட்டும் ஜெபகோபுரங்கள், அவர்களின் இளம்பங்காளர் திட்டம் ஆகிய இவைகள் எதற்கும் காணிக்கை அனுப்பி ஆசீர்வாதத்தை இழந்துபோகாதீர்கள் என்று வெளியரங்கமாக எழுதினவன் நான். ஆகவே என் பதிலை சரியாக மீண்டும் ஒருமுறை வாசித்து ஒரு ஊழியனை வெறுக்கிறேனா அல்லது அந்த ஊழியத்தில் உள்ள தவறுகளை வெறுக்கிறேனா என்பதை கவனியுங்கள்.

கேள்வி:  CSI சபைகள் உயிர்மீட்சி பெறுவதின் அடையாளம் என்ன?
பதில்:  CSI சபையினரானாலும் சரி, லூத்தரன் சபையினரானாலும் சரி, என்றைக்கு சபை மூப்பர்கள்(டீக்கன்மார்) சபை விசுவாசிகளாக உள்ளவர்களில் உள்ள வியாதியஸ்தர்களுக்காக அவர்கள் வீட்டுக்கு சென்று ஜெபித்து வியாதிகள் சுகமாவதை நாம் காண்கிறோமோ, அப்போதுதான் சபைகள் உயிர்மீட்சி பெற்றுவிட்டது என்று ஓரளவு அறியலாம். இப்போது நம் சபைகளில் காணப்படும் எலக்ஷன் சண்டைகள், பணம் செலவழித்து எலக்ஷனில் ஜெயிக்க முயல்வது, சபையிலுள்ள முன்னாள்-இந்நாள்கமிட்டியினரின் போட்டி, கோர்ட் கேஸ்கள், காணிக்கை கொள்ளை, சாட்சியில்லா வாழ்க்கை, சர்வசாதாரணமாக நடைபெறும் விவாகரத்துகள் அதை சபை ஆயர், பிஷப் யாவரும் அங்கீகரிப்பது,இரண்டு மனைவி உள்ளவர் சபை பொறுப்பில் வர பிஷப்பே ஏற்பாடு செய்யும் அவலம். அரவாணிகளை ஆயர் ஆக்கும் ஆபத்தம், பிஷப்மார்களை விலைமாதர்களைப்போல் பிஷப் எலக்ஷனில் பணம் கொடுத்து விலைக்கு வாங்குவது, டையோசிஸ் கவுன்சில் கூட்டங்கள் நடக்கும்போது மதுபானங்கள் பரிமாறும் நிலை, டையோசிஸ் கவுன்சில்களில் பணபெட்டிகளின் விளையாட்டு, சபைக்கு சாட்சியில்லா ஆயர்களை நியமிப்பது, இப்படி அடுக்கடுக்கான வேதனை தரும் விஷயங்களை கண்கூடாக காணும்போது உயிர்மீட்சி எப்படி வரும்? உயிர்மீட்சியின் அடையாளத்தைகூட இப்போதைக்கு காண்போம் என்ற நம்பிக்கை இழந்திருக்கிறேன். இந்த லட்சணத்தில் எழுதுகிற நானே ஒரு உயிர்மீட்சி பிரங்கியார்தான் என்ன செய்வது? எத்தனை கன்வென்ஷன், எத்தனை பிரசங்கிமார்கள், எத்தனை நாட்கள் பிரசங்கித்தாலும் சபை மக்கள், சபை மூப்பர், ஆயர்கள் மனந்திரும்புதலின் அனுபவத்துக்குள் வராதவரை சடங்காசார பெயர் கிறிஸ்தவர்கள் என்ற பெயர் ஒருபோதும் நீங்காது. இத்தனை பிரச்சனைகளுக்கும்மிடையே ஒன்று, இரண்டு பேர்கள் சபை அரசியலில் தலையிடாமல் தன்னையும், தன் ஆத்துமாவையும் காத்துக்கொண்டபடியால் அவர்கள் மூலமாக கர்த்தர் ஆங்காங்கே கிரியை செய்து விவரிக்க முடியாத பெரிய காரியங்களை இரகசியமாக சபைகளில் செய்துகொண்டிருக்கிறார். இவர்கள் மூலமாகத்தான் ஒருநாள் உயிர்மீட்சியின் தீப்பிழம்பு வெடித்து சிதறுவதை காணப்போகிறோம். அந்த நாள் எந்நாளோ?